ஈரோடு, அக் 23:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை கூட்டும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். ஈரோடு மாவட்டத்திலும் நான்கு கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றும், நாளை (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசிமுகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் இன்று 569 மையங்களில் மாபெரும் தடுப்பூசிமுகாம் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டிலும், ஒவ்வொரு தடுப்பூசி முகாம் என 60 தடுப்பூசி முகாம், 4 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம், இதுபோக 40 நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி முகாம் போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகரில் மட்டும் இன்று 104 மையம் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகரில் உரிய தேதிக்குப் பிறகும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத 20 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த 20 ஆயிரம் பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. ஈரோடு பஸ் நிலையம், ஆர்.கே.வி., ரோடு உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். இன்று மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறும். இதைத் தொடர்ந்து நாளையும் இரண்டாவது நாளாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும். நாளை மாவட்டம் முழுவதும் 620 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்ட கொள்ளுமாறு சுகாதாரதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/