சத்தியமங்கலம் செப் 2:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே குரும்பபாளையத்தில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் குடிசை போடுவதற்காக ஒரு லாரியில் பந்தல் மற்றும் மூங்கில் கொண்டு வந்து 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிசை அமைக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர் ஆகியோர் சம்பவ இடம் சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது புஞ்சைபுளியம்பட்டி காந்தி நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு நிலம் வேண்டி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு மனு கொடுத்ததும், தற்போது அரசுக்கு சொந்தமான நிலத்தில் குடிசை அமைக்க முற்பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து குடிசை அமைக்க பந்தல் மற்றும் உபகரணங்களை ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து, சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் அனுமதியின்றி குடிசை அமைக்க கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று விண்ணப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/