ஈரோடு நவ 24:

ஈரோட்டில் ஜவுளி சந்தை வாரந்தேறும் திங்கள் கிழமை இரவு முதல் செவ்வாய் கிழமை மாலை வரை நடைபெறும். இந்த சந்தையானது ஈரோடு திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, கனி மார்க்கெட், பழைய சென்ட்ரல் தியேட்டர் பகுதியில் கூடும். இங்குள்ள கடைகளில் ஜவுளி ரகங்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுவதால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும், அதிகளவில் வந்து ஜவுளிகளை வாங்கி செல்வது வழக்கம்.

தீபாவளி பண்டிகை சீசனையொட்டி ஜவுளி சந்தையில் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும், 75 சதவீதற்கு மேல் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் ஓரளவு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக இன்று ஈரோட்டில் நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாவட்ட வியாபாரிகள், வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் ஜவுளிச் சந்தை வெறிச்சோடியது. சில்லரை வியாபாரம் வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நூல்கள் விலை உயர்வால் துணி விலைகளும் உயர்ந்து உள்ளது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜவுளி வியாபாரி ஒருவர் கூறும்போது.

ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளியை ஒட்டி ஓரளவுக்கு நல்ல வியாபாரம் நடந்தது. அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்ட வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இன்று வரவில்லை. இதனால் இன்று வியாபாரம் மந்த நிலையிலேயே நடந்தது.

இது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் நூல் விலை உயர்ந்துள்ளதால் அனைத்து வகையான துணிகள் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஜட்டி, பனியன்கள் ரூ.10 முதல் 20 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் லுங்கி, துண்டு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. சேலை, வெப்சிட் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக துணிகள் விலையும் உயந்துள்ளதால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, என்றனர். https://www.texmin.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/