ஈரோடு சூலை 9:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.இந்த திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரசால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5-வது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே