கவுந்தப்பாடி அக் 3:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த தயிர்பாளையம் காமராஜர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் கடந்த 15 வருடமாக செயல்பட்டு வருகிறது.

இங்கு 4 குடோன்களில் ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்தப் பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் மழை பெய்து வந்தது. நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் 1.30 மணி அளவில் மஞ்சள் குடோன் பகுதியில் திடீரென பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் ஒரு மஞ்சள் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. குடோனில் இருந்து கரும்புகை வெளியே வருவதை பார்த்து அங்கு இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த வாட்ச்மேன் இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். முதலில் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து ஈரோடு, கோபி, பெருந்துறை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் காந்தி, ரவீந்திரன், ஆறுமுகம், முத்துசாமி ஆகியோருடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென மஞ்சள் மூட்டைகளில் பிடித்து எரிந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர். நான்கு குடோன்களில் மூன்று குடோன்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மஞ்சள் மூட்டைகள் எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என தெரியவருகிறது. ஒரு குடோன் மட்டும்  தீயில் இருந்து தப்பியது. இதனால் அந்த குடோனில் இருந்த நூற்றுக்கணக்கான மூட்டைகளை ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக வெளியேறினர். தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டனர். பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் பார்வையிட்டார். கோபி டி.எஸ்.பி., ஆறுமுகம் மற்றும் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடோனில் இருந்து இன்னமும் கரும்புகை வெளியேறி வருவதால் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/