கோபிசெட்டிபாளையம் டிச 22:
கோபி அருகில் உள்ள பா.வெள்ளாளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சாணார்பாளையம். இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் யாராவது இறந்து விட்டால், அந்த வழியாக செல்லும் கீரிப்பள்ளம் ஓடையை கடந்து சென்று அங்குள்ள மயானத்தில் பிணங்களை புதைத்து வருகின்றனர்.
இதற்காக ஓடையின் குறுக்கே இருந்த சிறிய அளவிலான தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் ஓடையில் அடித்து வரப்படும் கழிவுகள், குப்பைகள் அந்த தரைப்பாலத்தில் அடைத்து கொள்வதால், மழைநீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனால் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தை அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினார்கள். இதனால் யாராவது இறந்தால், ஓடையில் செல்லும் தண்ணீரில் இறங்கி பிணத்தை மயானத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்று வந்தனர். எனவே மயானத்திற்கு பிணத்தை கொண்டு செல்வதற்கு வசதியாக ஓடையின் குறுக்கே சிறிய அளவிலான பாலமாவது கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று சாணார்பதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவரின் மனைவி மரகதம்(வயது88) என்பவர் இறந்தார்.
அவருடைய உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக அவருடைய உறவினர்கள், ஓடையின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்து, பெரிதும் சிரமத்திற்கு இடையே பிணத்தை கொண்டு சென்று மயானத்தில் புதைத்தனர். எனவே பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்ல போதிய பாதை வசதி இல்லாத சாணார்பதியில், கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உடனடியாக பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.tnurantree.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today