ஈரோடு சூலை 28:
ஈரோடு மண்டலத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கடந்த மூன்று நாட்களாக நடத்திய தொடர் வாகன தணிக்கையில், அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கிய 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உட்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு உத்தரவுக்கு பின் அனைத்து வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. இதில், சிலர் வாகன போக்குவரத்து விதிகளை மீறியும், தகுதியற்ற வாகனங்களையும் விதிகளை மீறி இயக்கி வருவதால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஈரோடு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், ஈரோடு மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில், 996 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 118 வாகனங்களுக்கு சோதனை அறிக்கையும், அரசுக்கு வரி செலுத்தாத 2 வெளிமாநில ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்து மற்றும் வாகன கட்டுப்பாடு விதிகளை மீறியதாக வாகன உரிமையாளர்களுக்கு ரூ.11 லட்சத்து 47 ஆயிரத்து 435 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 235 வரியாகவும், ரூ.56 ஆயிரத்து 800 அபராதமாக உடனடியாக வசூலிக்கப்பட்டது. இத்தகவலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today