ஈரோடு அக் 5:

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு வாரத்தை முன்னிட்டு மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு வாரம் கடந்த 4ம் தேதி முதல் வருகிற 9ம் தேதி கடைபிடிப்பதை முன்னிட்டு, இந்த விழிப்புணர்வு பிரசார வீடியோ வாகனம் தொடங்கி வைப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். இந்த பிரசார வாகனத்தின் மூலம் மழை நீரை நேரடியாகவோ அல்லது நிலத்தடியிலோ செலுத்தி எப்படி சேமிப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள், கூரையின் மேல் விழும் மழை நீரை சேகரித்தல், திறந்த வெளிக்கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல், குழாய் கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல், கசிவுநீர் குழிகள் மற்றும் துளையுடன் கூடிய கசிவுநீர் குழிகள் மூலம் சேகரிக்கும் முறைகள் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை மேற்பார்வை பொறியாளர் சுதாமகேஷ், நிர்வாக பொறியாளர்கள் பொன்னுசாமி, லலிதா, துணை நிலை நீராளர் மணி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/