ஈரோடு சூலை 2: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கடுமையாக வாட்டியது. நேற்று முன்தினம் வெயிலால் வெப்பக்காற்று வீசி, மாலையில் மேகமூட்டமானது. மாலையில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. இதனால், அகில்மேடு வீதி, நாச்சியப்பா வீதி, மணிக்கூண்டு, சென்னிமலை சாலை போன்ற பல இடங்களில் மழை நீர் தேங்கியும், ஆறாக ஓடியும், வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தியது.
புறநகர பகுதியான பவானிசாகர், கவுந்தபாடி, கோபி, கொடுமுடி, சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கவுந்தப்பாடியில் 65 மில்லி மீட்டர் மழை பதிவானது. சந்தைபேட்டை சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு- – சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள புளிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறையினர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ரோட்டில் விழுந்து கிடந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தினர்.நேற்று கவுந்தப்பாடி–65, பவானிசாகர்–62.8, கோபி–29, ஈரோடு–24, கொடுமுடி–22.4, இலந்தகுட்டைமேடு–19.8, நம்பியூர்–10, மொடக்குறிச்சி–8, குண்டேரிபள்ளம்–7, சென்னிமலை–3, அம்மாபேட்டை–2.8, பவானி–2.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே