பெருந்துறை ஆக 10:
பெருந்துறை பழைய பஸ் நிலையம் பாதை தார் சாலை மற்றும் வடிகால் பணி முடிக்காததால், நேற்று பெய்த மழையால் மார்க்கெட் கடைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இப்பகுதிக்கு நேரில் வந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் அங்குள்ள கடை உரிமையாளரிடம் பொதுமக்களிடம் இதுபற்றி கேட்டறிந்தார். அவர்கள் கூறும் போது, பழைய பேருந்து நிலையம் முதல் போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானா வரை வடிகால் மற்றும் தார்சாலை அமைக்கும் பணி நீண்ட காலமாக மெதுவாக நடைபெற்று வருகிறது. தற்போது வடிகால் மூடி வைக்கப்பட்ட நிலையில் அங்கு பெய்த கன மழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்த சாலை பணி வடிகால் பணி நடக்கும் காலங்களில் கடைகள் நீக்கப்படாததால் பேரூராட்சி மூலம் வாடகை வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் பேரூராட்சி அதிகாரிகளிடமும் அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் எனவும், இந்த பணி நடைபெற்ற காலங்களில் இப்பகுதியில் உள்ள கடைகளுக்கு பெருந்துறை பேரூராட்சி வாடகை வசூல் செய்யக்கூடாது எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பின்னர் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிதோப்பு பகுதியில் மழை நீர் தேங்கி இருந்த இடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
மேலும் ஜீவா நகர் பகுதியில் மழைநீர் தேங்கி வெளியேற்றும் பாதையை பார்வையிட்டார். மேலும் பவானி சாலையில் உள்ள சுபாஷ்சந்திரபோஸ் வீதியில் மூடப்படாமல் உள்ள வடிகாலுக்கு காங்கிரீட் மூடி அமைக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். பெருந்துறை பேரூர் கழக செயலாளர் கல்யாணசுந்தரம், வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவரும் ஒன்றிய கழகச் செயலாளருமான விஜயன் என்கிற ராமசாமி, வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் டி டி ஜெகதீஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் அருள்ஜோதி செல்வராஜ், கருமாண்டி செல்லிபாளையம் பேரூர் கழக செயலாளர் கே.எம் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today