ஈரோடு ஆக 6:

தாளவாடி மலை தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை துவக்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், எம்.பி., எஸ்.செல்வராஜ் மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில், வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் என்ற திட்டத்தை அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது. இங்கு ஏற்கனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழே இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனை தவிர்த்து, ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டு வரும் பட்சத்தில் பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும்.

எனவே இத்திட்டத்தை நிறைவேற்றி வழங்க ஏதுவாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து நமது ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதற்கட்டமாக 1,409 பயனாளிகள் பயன்பெற உள்ளனர். மேலும், படுத்த படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம் நோய்த் தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.

உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000- மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும் மற்றும் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார். கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, உதவி இயக்குநர் ஊராட்சிகள உமாசங்கர், துணை இயக்குநர் சுகாதார பணிகள மரு.சவுண்டம்மாள், தாளவாடி வட்டாட்சியர் வெ.உமாமகேஷ்வரன், பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today