ஈரோடு டிச 17:
ஈரோடு மாவட்டத்தில் 280 இடங்களில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடப்பு ஆண்டில் “சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்திட தமிழக அரசு உத்திரவிடப்பட்டுள்ளது. இதன்படி நடப்பாண்டிற்கு டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 முடிய ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
முகாம்களில் பங்கு பெறும் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக கால்நடை மருத்துவக்குழு மூலம் மேற்கொள்ளப்படும்.
முகாம்களில் கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.nss.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today