ஈரோடு ஆக 23:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரசு அலுவலகம் முதல் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள் என அனைத்து மூடப்பட்டன.
இதைத்தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று குறைய தொடங்கியதையொட்டி ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை மாவட்டம் முழுவதும் 50 தியேட்டர்கள் உள்ளது.
இதில் மாநகர் பகுதியில் மட்டும் 11 தியேட்டர்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி உத்தரவிட்டார். அதில், நாளை (23ம் தேதி) முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களையும் திறந்து கொள்ள அனுமதி அளித்தது. இதனை அடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் சுத்தப்படுத்தும் பணி நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கூறியதாவது:-கொரோனா பரவலை கட்டுப்படுத்தி, தமிழக அரசு சரியான நேரத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. தியேட்டர்களை திறக்க நோய் தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதி செய்துள்ளோம்.
தியேட்டருக்கு வரும் மக்களுக்கு நுழைவு வாயிலேயே உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய தெர்மல் ஸ்கேனர் செய்தும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவர். அரசின் அனுமதியை முறையாக பயன்படுத்துவோம். 23ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதித்ததாலும், தமிழகம் முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள், தலைமை சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, எந்த படம் திரையிட தயாராக உள்ளது.
அதில், எந்த படத்தை தமிழகம் முழுவதும் திரையிடுவது என முடிவு செய்து, ஒரே நேரத்தில் தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26ம் தேதி அல்லது 27ம் தேதியில் ஈரோடு மாவட்டத்தில் தியேட்டரில் படங்கள் வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today