ஈரோடு செப் 15:
ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் பொது விநியோகத் திட்டத்தில் பணிபுரியும் நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இப்பயிற்சியினை ஈரோடு சரக கூட்டுறவு துணை பதிவாளர் நர்மதா தொடங்கி வைத்து பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 817 முழுநேர நியாய விலைக்கடைகளும் மற்றும் 319 பகுதிநேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 1136 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மண்டலத்தில் பணிபுரியும் 693 நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி நடைபெறுகிறது.ஏற்கனவே கோபி, நம்பியூர், பவானிசாகர், அந்தியூர், பவானி மற்றும் சத்தியமங்கலம் வட்டாரங்களில் பணிபுரியும் 362 விற்பனையாளர்களுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை வட்டாரங்களில் பணிபுரியும் 331 விற்பனையாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது.நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடையின் பராமரிப்பு, கடைத்தூய்மை, பதிவேடுகள் பராமரிப்பு போன்றவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். இப்புத்தாக்கப்பயிற்சியானது விற்பனையாளர்களின் பணித்திறனையும், செயல்பாடுகளையும் மேலும் செம்மையாக்குவதாக அமையும். இவ்வாறு பேசினார். இப்பயிற்சி முகாமில் கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், பொதுவிநியோகத்திட்ட துணைப்பதிவாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/