ஈரோடு நவ 12:

ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையையொட்டி காய்ச்சல் முகாம், கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நேற்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய செட்டிபாளையம் பகுதியில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் சோதனை நடத்தப்பட்டு, அவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமினை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், வீடு வீடாக சென்று கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டார். மேலும், மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் உள்ள குளோரின் அளவினையும் சோதனை செய்தார். இந்த ஆய்வின்போது, சுகாதார பணிகள் மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் சோமசுந்தரம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளை சுற்றியுள்ள திறந்த வெளி பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நீர் சேமித்து வைக்க கூடிய தொட்டிகள், டிரம்கள், டேங்குகள் ஆகியவற்றில் கொசுக்கள் உட்புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை நீர் உள்ள தொட்டிகளில் தண்ணீர் முழுவதையும் வெளியேற்றி பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் பின்புறம் உள்ள நீரையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உடைந்த பிளாஸ்டி பொருள்கள், டீ கப்புகள், இரும்பு பொருள்கள், பழைய டயர்கள், பானைகள், தொட்டிகள், ஆட்டு உரழ்கள், தேங்காய் தொட்டிகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மொட்டை மாடிகளில் நீர் தேங்காதவாறு இலை தழைகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும். குடிநீர் குழாய்களுக்கு அருகில் உள்ள குழிகளில் தேங்கும் தண்ணீரில் கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால் அவற்றினை கண்டறிந்து தண்ணீர் தேங்காதவாறு சரி செய்ய வேண்டும்.

குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் அரசு மருத்துவனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். தனியார் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டுமான பகுதிகளில் கொசு உற்பத்தி ஆகும் வகையில் நீரை தேங்க விடக்கூடாது. தங்கள் வீடு தேடி வரும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/