ஈரோடு டிச 23:
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக செயல்படுத்துப்பட்டு வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோபி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அங்கன்வாடி மையங்கள் சிறியதாக இருப்பதால் இட நெருக்கடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அங்கன்வாடி மையத்தில் கேஸ் சிலிண்டர் மற்றும் சமையல் செய்யும் பொருட்கள், குழந்தைகள் அமரும் மேஜைகள் உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் இட நெருக்கடி ஏற்படுவதாக கல்வி திட்ட பயிற்றுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடத்துவதற்காக அங்கன்வாடி மையத்தில் உள்ள அரிசி மூட்டைகள், பருப்பு மூட்டைகள், சமையல் பொருட்கள், பாத்திரங்கள், விளையாட்டு பொருட்கள், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைகளை பாதுகாப்பாக தினமும் மாலையில் எடுத்து ஒழுங்குபடுத்திவிட்டு மீண்டும் அடுத்த நாள் காலையில் வழக்கமான இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
எனவே அங்கன்வாடி மையங்களுக்கு பதிலாக வேறு இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்புகள் நடத்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். https://www.tnschools.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today