ஈரோடு அக். 22:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழ அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை கூட்டும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். ஈரோடு மாவட்டத்திலும் நான்கு கட்ட தடுப்பூசி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை)நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளையும் (22), நாளை மறுதினம் (23) நடக்கிறது. நாளை 569 மையங்களிலும், நாளை மறுநாள் 620 மையங்களிலும் என மொத்தம் 1,189 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 1 லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத, 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தலாம். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால், 84 நாட்கள் நிறைவடைந்த பினறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால், 28 நாட்கள் நிறைவடைந்த பிறகு, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 18 வயது நிரம்பிய பொதுமக்கள் தவறாமல், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
இதேபோல் ஈரோடு மாநகர் பகுதிகளிலும் 64 மையங்களிலும், 40 நடமாடும் வாகனங்கள் மூலமும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்படும் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் இந்த மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/