ஈரோடு டிச 15:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) செயல்பட்டு வருகிறது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையானது புகழ் பெற்றது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளைக் மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ஜவுளி சந்தை வியாபாரம் முடங்கியது. தற்போது ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில்  வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால்  வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக கடந்த சில வாரமாக கூடிய சந்தையில் மொத்த வியாபாரம் மந்த நிலையிலேயே நடந்து வந்தது. சில்லறை வியாபாரம் ஓரளவு நடந்து வந்தது.

இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் சந்தை வெறிச்சோடியது. வடகிழக்கு பருவமழை ஒரு காரணமாக இருந்தாலும் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து  12 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு மற்றொரு காரணமாக அமைந்துவிட்டது.

இந்த வரி விதிப்பு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டனர். இதனால் ஜவுளி ரகங்கள் பெரிய அளவில்  இன்று சந்தைக்கு வரவில்லை. இன்று கேரளாவில் இருந்து மட்டும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர்.

இன்றும் மொத்த விற்பனை வெறும் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அதே நேரம் திருநெல்வேலி, மார்த்தாண்டம், தென்காசி, பகுதிகளில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் வந்ததால் சில்லறை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இனி  கிறிஸ்துமஸ் புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். https://www.wholesaletextile.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today