சத்தியமங்கலம் நவ 19:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 103 அடியை எட்டியது. பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் இன்று பவானிசாகர் அணையில் 104 அடியை எட்டியது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.24 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 10,000 கனஅடியும் என மொத்தம் 11 ஆயிரத்து 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணை 104 அடியை எட்டியதால் அணை கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் துணி துவைக்வோ, குளிக்கவோ கூடாது என்றும், கால்நடைகளை நீர் நிலை அருகே மேய்க்க விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சூழ்நிலையை பொதுப்பணித் துறையினரும், வருவாய் துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/