ஈரோடு சூன் 29: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 15க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் மொத்த கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் தூத்துக்குடி, கன்னியாகுமரி, கேரள மாநிலம் எர்ணாகுளம் போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

கடல் மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீன் பிரியர்கள் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில்  வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கொரோனா பரவலை தொடர்ந்து மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி சமூக இடைவெளி கடைப்பிடித்து கடைகள் அமைக்கப்பட்டன.

வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள், மீன் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வலியுறுத்தப்பட்டது. நுழைவு வாயில் கிருமிநாசினி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா 2-ம் அலை மாவட்டத்தில் வேகமெடுக்க தொடங்கியதால் கடந்த மே மாதம் முதல் ஸ்டோனி பிரிட்ஜ்  மீன் மார்க்கெட் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிட்டத்தட்ட 48 நாட்களுக்கு பிறகு இன்று ஸ்டோன் பிரிட்ஜ் மீன் மார்க்கெட் வியாபாரத்திற்காக திறக்கப்பட்டது. மீன் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் நாள் என்பதாலும், மார்க்கெட் திறந்தது தெரியாததால் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. நாளையிலிருந்து வழக்கம்போல் வியாபாரம் சூடு பிடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே