ஈரோடு டிச 15:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பல்வேறு இடங்களில் தீவிரமாக பெய்தது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் எதிரொலியாக காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பல்வேறு காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் பெரிய மார்க்கெட்டில் மழை காரணமாக பல்வேறு காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்தது. மேலும் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பலரும் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் அசைவத்திற்கு பதிலாக சைவத்துக்கு மாறி உள்ளனர். இதனால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.
எனினும் தேவைக்கேற்ப வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் விலை ஜெட் வேகத்தில் எகிறி உள்ளது. தினமும் 100 மூட்டை முருங்கைக்காய் வரும் இடத்தில் தற்போது வெறும் 10 மூட்டைகள் மட்டுமே வருகிறது.
இதனால் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு அதிரடியாக உயர்ந்து இன்று ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து முருங்கைக்காய் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைப் போல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு: கத்திரிக்காய்-–120, கருப்பு அவரை–120, பட்டா அவரை–100, பீட்ரூட்–60, கேரட்–70, பீன்ஸ்–80, பச்சை மிளகாய்–70, முட்டைக்கோஸ்–60, இஞ்சி–50, உருளைக்கிழங்கு–40, முள்ளங்கி–50, பீர்க்கங்காய்–70, பாவைக்காய்–60, சின்ன வெங்காயம்–50 –- 60, பெரிய வெங்காயம்–40 –- 50 ரூபாய்க்கு விற்பனையானது. https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today