ஈரோடு நவ 12:

சென்னையில் வெள்ள நிவாரண பணிக்கு செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர் கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

சென்னையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிகளுக்கு ஈரோடு உட்பட பிற மாவட்டத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றனர். அழைத்து சென்ற விதமும், நடத்திய விதமும் கசப்பான அனுபவத்தை தந்தது. அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக வழங்கவில்லை.

மேலும், தூய்மை பணி மேற்கொள்ள முறையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வில்லை. எனவே, நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியில் வெள்ள பாதிப்பு பணிகளை சீர் செய்ய ஈரோடு மாவட்டத்தில் இருந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தனி பஸ் வசதி, தரமான உணவு, தங்குமிடம், பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்கள் தங்குமிடத்தில் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

வெள்ள நிவாரண பணிகளுக்கு செல்வதால் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும். தொடர்ந்து பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். இப்பணியில் ஈடுபடும் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.  https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/