ஈரோடு ஜூன் 15: ஈரோடு மாவட்டத்தில் கொரானா தாக்கம் அதிகரிக்கும் நிலையில், தடுப்பூசி வராததால் மீண்டும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 2.57 லட்சம் பேர் கொரானா தடுப்பூசி போட்டுள்ளனர்.

கடந்த 7ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு இல்லாததால்  7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் 13,400 கோவிஷில்டு தடுப்பூசி வந்ததை அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.

அதிகாலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். ஒரு மையத்திற்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கி தடுப்பூசி போட்டனர். பல மையங்களில் அதிக நபர்கள் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி போட்டனர்.

இந்நிலையில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் இன்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.இதுபற்றி அந்தந்த தடுப்பூசி மையங்களின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.இது பற்றி தெரியாததால் இன்று அதிகாலை முதல் மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். அறிவிப்பு பலகையை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பினர். பாதிப்பு அதிகமுள்ள மாவட்டம் என்ற முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் அதிக அளவு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே.