ஈரோடு சூலை 14:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியது. குழந்தைகள் வாலிபர்கள் வயதானவர்கள் என வயது பேதமின்றி அனைவரையும் தாக்கியதுடன் பலர் இறந்தனர். ஒருபுறம் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், கொரோனா பரிசோதனையாக, 12 ஆயிரம் பேருக்கு செய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைவதால் தினமும் மாநகராட்சி பகுதியில் 4 ஆயிரம் பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தற்போது வரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 8,899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தற்போது 1,676 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 43 பகுதிகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today