ஈரோடு நவ 9:

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மாவட்டம் முழுவதும் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க  கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரண்டு முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டில் நாளை 10ம் தேதி முதல் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள் குக்கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக 2.80 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு, மருந்துகள் ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/