ஈரோடு செப் 30:

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் சிரமப்பட்டனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. அப்போது இடி-, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாமல் அடை மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வீதியில் நடந்து சென்ற பொதுமக்களும் ஆங்காங்கே ஒதுங்கினார்கள். இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் மழைக்கு ஒதுங்கினர்.

ஈரோடு பஸ் நிலையம், சூரம்பட்டி, ரெயில் நிலையம், கள்ளுக்கடைமேடு, நாடார் மேடு, கொல்லம்பாளையம், மரப்பாலம், கருங்கல்பாளையம், அசோகபுரம், வீரப்பன்சத்திரம், சூளை, பெரியவலசு, பழையபாளையம், திண்டல் என மாநகர் பகுதி முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. ஆர்.கே.வி.ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி, சத்தி ரோடு, பவானி ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்துகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார்களில் தண்ணீர் புகுந்ததால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டார்கள். கருங்கல்பாளையம் காவிரி ரோடு பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தச் சாலை வழியாகத்தான் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வரும் பஸ்கள், கார்கள், லாரிகள் அனைத்து பேருந்துகளும் இவ்வழியாக ஈரோடுக்குள் வருகின்றன. எனவே இந்தச் சாலை மிக முக்கியமாக காணப்படுகிறது.

இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் அந்த பகுதி முழுவதும் குண்டும், குழியுமான ரோட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாநகர் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நேதாஜி ரோடு, ஆர்.கே.வி., ரோடு பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து முடங்கியது. பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை, சூரம்பட்டி நால் ரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா, சத்தி ரோடு, பவானி ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும், பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கருங்கல்பாளையம் கந்தசாமி வீதியில் 8 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதேபோல் முனிசிபல் காலனி, இந்திரா நகர், மோசிக்கீரனார் வீதி, மரப்பாலம், சூரம்பட்டி அணைக்கட்டு உள்பட பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், பாத்திரங்களில் பொதுமக்கள் தண்ணீரை வெளியேற்றினார்கள். வீடுகளில் கைக்குழந்தைகளுடன் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தார்கள். கருங்கல்பாளையம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியின் சுற்று சுவரின் ஒரு பகுதியில் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டாடா சுமோ சேதம் அடைந்தது. காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதமில்லை. திடீரென பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின்சார வினியோகம் தடைபட்டது. மழை பெய்வதற்கு முன்பு அடித்த காற்றில் ஈரோடு பஸ் நிலையம் அருகில் மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையின் விளம்பர பலகையில் தீப்பற்றியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் மழை பெய்து தீ அணைந்தது. இதைப்போல் வ.உ.சி பூங்காவில் தற்காலியமாக செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டின் பின் பிற பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இரண்டு மணி நேரமாக பெய்த மழையால் ஈரோடு மாநகரம் ஸ்தம்பித்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று 65 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேநேரம் புறநகர்ப் பகுதியில் மழை பெய்யவில்லை.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/