ஈரோடு சூலை 24:
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பவானி ஆற்றுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று பவானிசாகர் அணைக்கு வந்தது. கடந்த 22ம் தேதி மதியம் 12 மணிக்கு அணையில் நீர் மட்டம் 96.60 அடியாகவும், அணைக்கு, ஆயிரத்து 872 கனஅடி நீர் வரத்தானது. அணையில் இருந்து 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து நீர் வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. 23ம் தேதி காலை 8 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.22 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் 900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலை 4 மணிக்கு 13 ஆயிரத்து 331 கனஅடியாக உயர்ந்து, 97.74 அடியானது. இரவுக்குள் 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 105 அடி வரை கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணைக்கு 102 அடி வந்தாலே அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்பது விதியாகும். தற்போது தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதி பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வருவாய்த்துறையினர் பொதுப்பணித்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today