ஈரோடு டிச 10:

மாநகராட்சியில் 23 ஆயிரம் தெருவிளக்குகள் எல். ஈ. டி.,யாக மாற்றப்பட்டதையடுத்து ஆண்டு மின் கட்டணத்தில் ரூ.50 லட்சம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் தெருக்கள், மெயின் ரோடுகளில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் வகையிலான மின்விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இதனால் மாநகராட்சி சார்பில் மின் கட்டணமாக கோடிகளில் செலுத்தி வந்தனர். இந்நிலையில், அனைத்து தெருவிளக்குகளும் எல்.ஈ.டி.யாக மாற்றப்பட்டதையடுத்து மின்கட்டணம் வெகுவாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ஈரோடு மாநகராட்சியில் 23 ஆயிரத்து 124 தெரு விளக்குகள் உள்ளது.

பராமரிப்பு பணிகள் முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் அனைத்தும் முழுமையாக எல்.ஈ.டி.யாக மாற்றப்பட்டுவிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி செலவில் 6,226 தெரு விளக்குகள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மின் கட்டணம் மாநகராட்சிக்கு பெரும் செலவினை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது எல்.ஈ.டி.யாக மாற்றப்பட்ட பிறகு ஆண்டொன்றுக்கு ரூ.50 லட்சம் வரை மின் கட்டணத்தை சேமிக்க முடிகின்றது. இவ்வாறு கூறினர். https://www.tnebltd.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today