ஈரோடு செப் 25:
ஈரோட்டில் நூல் மில்லில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நூல் பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன. ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஜெய் விநாயகா சைசிங் மில் இயங்கி வருகிறது.
இந்த மில்லில் சுழற்சி முறையில் நாள் தோறும் சுமார் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த மில் குடோனில் நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இன்று அதிகாலை சுமார் 2.45 மணிக்கு குடோனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நூல் பண்டல்களில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.அப்போது பணியில் இருந்த மற்ற ஊழியர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில் நிலைய அலுவலர் முத்து குமாரசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வேகமாக சென்றனர். அங்கு அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர்.
எனினும் மில்லில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நூல் பண்டல்கள், துணி பேனல்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் சேதம் மதிப்பு விவரம் உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்று இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். அதிகாலை விபத்து ஏற்பட்டதால் குறைந்த அளவே பணியாளர்கள் இருந்தனர். இதனால் பெரும் விபத்து, உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/