கோபிசெட்டிபாளையம் நவ 26:
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் தளர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை போக்க இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் முன்னோட்டமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு மாலை நேரங்களில் மாணவர்களுக்கு அவர்கள் பாடம் நடத்துவார்கள். இதற்காக தன்னார்வலர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர இந்த 12 மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பங்கேற்கும் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இல்லம் தேடி கல்வித்திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை குழு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் சென்று விழிப்புணர்வு நாடகம் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர இதுவரை 8,918 தன்னார்வலர்கள் பதிவு செய்து உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். https://www.education.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/