ஈரோடு சூலை 24:

ஈரோட்டில் காக்கும் கரங்கள் குழுக்கள் சார்பில் நடந்த பயிற்சியில் கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். பின் டி.ஐ.ஜி., முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் குழந்தைக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் காவல் துறை செயல்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் காக்கும் கரங்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 10 துறைகளை சேர்ந்தவர்கள், கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்களாக இது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் போன மாதத்தைவிட இந்த மாதம் குறைந்து உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஒரு நாள் இது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் இந்த 34 குழுக்கள், கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த குழு தொடங்கி ஒரு மாதத்துக்குள் 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். ஈரோட்டில் 15 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருகிறார்கள். அதேபோன்று கடந்த ஜூன் மாதம் 9 போக்சோ வழக்குகள் பதிவாகி இருந்தது. ஜூலை மாதம் 6 ஆக குறைந்துள்ளது. போக்சோ வழக்கில் இரண்டு முறை கைதானவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு எஸ்.பி., சசிமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today