ஈரோடு டிச 13:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது.
தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார மையங்கள், சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இது தவிர 14 கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியை சேர்த்து மொத்தம் 24 லட்சத்து 54 ஆயிரத்து 232 பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்னும் 2 லட்சத்து 44 ஆயிரத்து 713 பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today