ஈரோடு, ஆக 2:
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதனால் இந்த மார்க்கெட்டில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட கூடுதல் கூட்டம் இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மீன் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தன
. இதேபோல் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் முகவசம் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசம், பாதுகாப்பு முறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வது வழக்கம். இன்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
முக கவசம் அணியாமல் மீன் வாங்க வந்த பொதுமக்கள் 8 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத இரண்டு மீன் கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இது தவிர மாநகர் பகுதியில் உள்ள மீன் கடைகள், மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இங்கும் அதிகாரி குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today