ஈரோடு சூன் 11: மருத்துவ கழிவுகளை சாலைகள், நீர் நிலைகளில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் செய்திக் குறிப்பில் கூறியதாவது:மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்கான மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளை சுற்றுச்சூழல் வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இந்த விதிகளை பின்பற்றுவதன் மூலம் மருத்துவ கழிவுகளின் உற்பத்தியையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தையும் குறைக்க முடியும். எனவே மருத்துவமனைகளில் இருந்து உருவாகும் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.தொற்று ஏற்படுத்த கூடிய மருத்துவ கழிவுகளை 48 மணி நேரத்திற்கு மிகாமல் சேமிக்கக்கூடாது.தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைத்து மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு மருத்துவ கழிவுகளை முறையாக கையாளுவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவ கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து பெறப்படுகின்றன.தற்போது கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில், மருத்துவக் கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவதால் பொது சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே அனைத்து மருத்துவமனைகள், கோவிட் நோயாளி பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்த பகுதிகளில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு உள்ள பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.அங்கீகரிக்கப்படாத முறையில் மருத்துவ கழிவுகளை அகற்றுவதை தவிர்க்க உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே