ஈரோடு சூன் 15: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் எனப்படும் ஜவுளி சந்தை வளாகத்தில் புதிய கட்டுமான பணி நிறைவடையும் நிலையில், 40 ஆண்டாக ஜவுளி விற்பனை செய்யும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து கடைகளை ஒதுக்க வேண்டும் எனக்கோரி அமைச்சர் சு.முத்துசாமியிடம் ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நூர்முகமது,  வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கிய மனு பற்றி கூறியதாவது:தென்னிந்தியாவில் ஜவுளி ரகங்களுக்கு புகழ் பெற்று 40 ஆண்டுகளாக ஈ.கே.எம்.அப்துல் கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) இயங்கி வருகிறது. இங்கு 230 தினசரி ஜவுளி வியாபார கடைகள், 2,000க்கும் மேற்பட்ட வாரச்சந்தை ஜவுளி கடைகள் இயங்கி வருகிறது. மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் கலந்து செய்கிறோம்.இந்த சந்தையில் ஈரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், சிவகிரி, சென்னிமலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமராபாளையம் பகுதியில் இருந்து சிறு, குறு ஜவுளி வியாபாரிகள் 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். 5 2ஆயிரம் குடும்பங்கள் ஜவுளி தொழிலை நம்பி வாழ்கின்றனர்.எங்களது கடைகளுக்கு கொரோனா காலத்திலும் வாடகை பாக்கி இல்லாமல் மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விரி விதிப்பு, பஞ்சு விலை ஏற்றம், ஜவுளி விலையேற்றம் போன்றவற்றால் ஜவுளி விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2019–-2020ம் ஆண்டில் கனிமார்க்கெட் வளாகத்தில் மத்திய, மாநில அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியது. இத்திட்டத்திற்கு எங்களது சங்கத்தின் மூலம் முழு ஆதரவு கொடுத்துள்ளோம்.இக்கட்டுமான பணி 6 மாதத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 40 ஆண்டு காலமாக சங்கத்தின் உறுப்பினர்களாக சந்தையில் விற்பனை செய்து வரும் ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து முதல் தளம், இரண்டாம் தள கடைகளை வழங்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் இருந்த எம்.எல்.ஏ., அமைச்சர், மாநகராட்சி கமிஷனர்கள் இதற்கு வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர். இந்த உறுதிக்கேற்ப வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.அதேபோல், பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதியில் சாலையொர வியாபாரிகளுக்கும் வணிக வளாகம் சார்ந்து வியாபாரம் செய்ய கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.இவ்வாறு கூறினர்.

நிருபர்.
ஈரோடு டுடே