ஈரோடு மே 31: ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள குருப்பநாயக்கன்பாளையம் அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில், சம்பா நடவுக்கு தேவையான 384 டன் நெல் சுத்திகரிப்பு பணி நடக்கிறது.இப்பணியை ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி பேசியதாவது;ஊரடங்கு இருந்தாலும் வரும் சம்பா நடவுக்காக நெல் விதை தேவையை கருத்தில் கொண்டு பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் நெல் விதை சுத்திகரிப்பு பணி நடக்கிறது.சம்பா பருவத்துக்கான நெல் ரகமான ஏ.டி.டி.,38, ஏ.டி.டி.,29, கோ50, ஐ.ஆர்.20, பி.பி.டி.,5204, மேம்பட்ட வெள்ளை பொன்னி, சம்பா சப்1, திருச்சி3 என வயல் மட்ட விதைகள் 384 டன் பெற்றுள்ளோம். அதில் 301 டன் விதைகள், சுத்திகரிப்பு பணி நிறைவடைந்துள்ளது.மேலும் தேவையான வயல் மட்ட விதைகளின் சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடக்கும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைக்கும் வகையில் வழங்க கேட்டுள்ளோம். பகுப்பாய்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற விதை குவியல்களை தாமதம் இன்றி சான்று அட்டை இணைத்து, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு மாறுதல் செய்யும் பணிகளையும் விரைவுபடுத்த தக்க யோசனை வழங்கப்பட்டுள்ளது.கொரானா ஊரடங்கு காலத்தில் வேளாண் பணிகள் தொய்வின்றி நடக்க, உழவர்களுக்கு தரமான விதைகள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.வேளாண் துணை இயக்குனர்கள் ஆர்.அசோக், துணை இயக்குனர் ஆர்.சிவகுமார், பவானி உதவி இயக்குனர் எஸ்.குமாரசாமி, விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர் ஆர்.கோகுலவாசன், விதை சுத்திகரிப்பு நிலைய இளநிலை பொறியாளர் என்.வெங்கடேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே