ஈரோடு ஜூன் 8: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து மைசூர் செல்லும் இந்த வனச்சாலையில் திம்பம் மலைப்பாதை உள்ளது.இச்சாலை வழியாக இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருக்கும். நேற்றிரவு சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி நோக்கி காரில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர்.திம்பம் மலைப்பாதை 24-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று படுத்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாகனத்தின் சத்தம் கேட்டு எழுந்த சிறுத்தை, அதை பொருட்படுத்தாமல் மீண்டும் தடுப்பு சுவரில் படுத்து கொண்டது.இந்த காட்சிகளை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். மலைப்பாதைகளில் இரவு நேரங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும் என்பதால் இரவு நேர பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
நிருபர்.
ஈரோடு டுடே