சத்தியமங்கலம் ஜூன் 8: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன.ஊரடங்கு காரணமாக தாளவாடி – தலமலை வனச்சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக உள்ளது. கோடை வெயிலால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதும், சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில் யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றது. சில யானைகள் வனத்துக்குள் செல்லாமல் சாலை ஓரங்களிலேயே வெகுநேரம் நின்று ஓய்வெடுத்தது. இதனால் வாகன ஓட்டிகள் யானைகளை தொல்லை செய்யாமல் வெகுநேரம் காத்திருந்துவிட்டு, யானைகள் வனத்துக்குள் சென்ற பின் பயணித்தனர்.இதுபற்றி, வனத்துறையினர் கூறியது,தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் சாலையோரம் நின்று தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையைக் கடக்கும். குட்டிகளுடன் இருக்கும் காட்டு யானைகள் ஆக்ரோஷத்தோடு மனிதர்களை தாக்க வாய்ப்பு உள்ளது. சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.வனச்சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் தங்கள் வாகனங்களை இயக்குமாறும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
நிருபர்.
ஈரோடு டுடே