ஈரோடு சூன் 17: கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்தது.ஈரோடு மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் – சி.ஐ.டி.யு., சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த மனுவை ஈரோடு மாவட்ட கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியத்தின் தொழிலாளர் உதவி ஆணையாளர் வழியாக நேற்று தொழிற்சங்க நிர்வாகிகள் வழங்கினார்கள்.மனு குறித்து கூறியதாவது:முழு ஊரடங்கால் தொழில்கள் முடக்கப்பட்டு, உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. கட்டுமான தொழில் நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இ–-பதிவு முறையில் பணியாளர்கள் வேலைக்கு செல்ல தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் இ-–பதிவு செய்து வேலைகளுக்கு செல்வது இயலாதது. இ–-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்.கட்டுமான தொழிலாளர்கள் சொந்த வீடுகள் இன்றி வாடகை வீடுகளில் உள்ளனர். வருமானம் இழப்பால் வாடகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக வாங்கி கடன், வட்டி, கடன் தவணை செலுத்துவதிலும் சிரமம் உள்ளது.கடந்த ஆண்டு ஊரடங்கின்போது அப்போதைய அரசு இரு முறை தலா ரூ.1,000 மற்றும் அரிசி, எண்ணை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கியது. அதே நேரம் ஊரடங்கு தளர்வுக்கு பின்னரும் கட்டுமான தொழில் பழைய நிலையை அடையாததால் பெரும்பாலானவர்கள் வேலை இழந்து உள்ளனர். எனவே கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கணக்கில் கொண்டு கொரோனா கால நிவாரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர் என்ற தகுதியை கொண்டு வழங்காமல் அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே